Sunday, November 27, 2022

பயிற்சி: குறள் வெண்பா

 குறள் வெண்பா

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

1. குறள் வெண்பா ஈரடியால் அமையும்

2. முதலடி அளவடியாகவும், ஈற்றடி சிந்தடியாகவும் வரும். அதாவது முதலடியில் நான்கு சீரும், இரண்டாம் அடியில் முச்சீரும் வரும்

3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டும் வரும்

4. நாள் மலர் காசு பிறப்பு வாய்பாட்டால் முடியும்

குறிப்பு 👇

குறள் வெண்பா இரண்டடிகளே கொண்டதாகையால், குறள்வெண்பாவின் ஈற்றடியில் பொழிப்பு மோனை அமைத்தே பாடவேண்டும் என்றால் பொருட்செறிவு குன்றலாம். அதனால் அவ்வீற்றடியில் மோனை வரவில்லை என்றாலும் குற்றமில்லை.

இதனால் மோனை வரவே வேண்டியதில்லை எனக் கருத வேண்டா. 

பொருட்செறிவு குன்ற வலிந்து மோனையமைக்க வேண்டியதில்லை என்பதே. மோனை வரின் சிறப்பு. வரவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், வெண்டளை பிழையாது, செப்பலோசையுடன் அமைய வேண்டும். திருக்குறள் வெண்பாக்களில் பெரும்பாலும் இவ்வாறு அமைந்திருத்தல் இக்காரணம் பற்றியேயாம்.


காட்டு👇

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகெலாம்

பேரறி வாளன் திரு

இது அடியெதுகையும், முதலடி  ஒரூஉ மோனையும், ஈற்றடி பொழிப்பு மோனை பெறாதும் வந்த குறள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ் வார்

இது அடியெதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும், ஈற்றடியில் இணைமோனையும் பெற்று வந்த குறள்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத்  தலை

இது அடியெதுகையும், இரண்டடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வந்த குறள்

அன்பர்கள் பயிலும் காலம் என்பதால் எதுகை  மோனை அமைத்தே எழுதிப் பழகுக.


ஆசிரியர்

செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 

ஏகாபுரம், 

சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment