Wednesday, November 23, 2022

​பாடம் - 12: தொடைத் தொடர்ச்சி

பாடம் - 12


தொடைத் தொடர்ச்சி 
-----------------------------------

உறழ்ச்சித்தொடை
~

இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல் 'முதற்றொடை' எனப்படும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் 'உறழ்ச்சித்தொடை' எனப்படும். உறழ்ச்சித்தொடை அளவடியிலேயே கொள்ளப்படும். அளவடி - நாற்சீரடி

அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது

1. அடிமோனை
2. அடியெதுகை
3. அடிமுரண்
4. அடியியைபு
5. அடியளபெடை

எனப்படும். இயைபுத்தொடை இறுதிச் சீர்களில் கொள்ளப்படும்.

ஓரடியின் சீர்களில் வரும் உறழ்ச்சித்தொடை,

1. இணை
2. பொழிப்பு
3. ஒரூஉ
4. கூழை
5. மேற்கதுவாய்
6. கீழ்க்கதுவாய்
7. முற்று
8. கடையிணை
9. கடைக்கூழை
10. இடைப்புணர்
11. பின்

எனப் பதினொரு வகைப்படும்.

இப்பதினொன்றையும் மோனை முதலிய முதற்றொடை ஐந்தனோடும் உறழ்ந்தால் (5×11=55)  உறழ்ச்சித்தொடை ஐம்பத்தைந்தாகும். உறழ்தல் - பெருக்குதல்.

👇

ஓர் அளவடியிலே,

முதல் இரு சீர்களில் மோனை வருவது இணைமோனை

முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் வருவது பொழிப்பு மோனை 

சுருங்கச் சொன்னால்...

1 , 2  சீர்களில் வருவது   -  இணை
1 , 3  சீர்களில் வருவது  - பொழிப்பு
1, 4   சீர்களில் வருவது   - ஒரூஉ
1, 2, 3 சீர்களில் வருவது - கூழை
1, 3, 4 சீர்களில் வருவது - மேற்கதுவாய்
1, 2, 4 சீர்களில் வருவது - கீழ்க்கதுவாய்
1, 2, 3, 4 சீர்களில் வருவது - முற்று

(இவை ஏழும் முதலிலிருந்து எண்ணப்படும்)

3, 4  சீர்களில் வருவது - கடையிணை
2, 3, 4 சீர்களில் வருவது - கடைக்கூழை
2, 3 சீர்களில் வருவது - இடைப்புணர்
2, 4 சீர்களில் வருவது  - பின்

(இவை நான்கும் கடையிலிருந்து எண்ணப்படும்)

இவ்வாறே ஏனைய எதுகை முதலிய நான்கு தொடைகளுக்கும் கொள்க.

குறிப்பு 👇

பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடைகள் வரும். 

இவற்றுள் 'பொழிப்பு' மோனையே சிறந்ததாகும். அடுத்தது 'ஒரூஉ' மோனை.

இவை அளவடியிலேயே கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்க.

👇

மோனை சீர்மோனையாகவே வரும். அதாவது ஓரடியிலுள்ள சீர்களில் மோனை வருதல். 
மோனை - முதலெழுத்து ஒன்றி வருதல்

எதுகை அடியெதுகையாகவே வரும். அதாவது இரண்டடிகளின் முதற்சீரில் எதுகை வருதல்.
எதுகை - இரண்டாமெழுத்து ஒன்றி வருதல்

நேரிசை வெண்பாவின் இரண்டாமடியில் ஒரூஉ எதுகை வரும். ஏனையடிகளிலும் பாக்களிலும் ஒரூஉ எதுகை 'அருகி' வரும்.
அருகி வருதல் - மிகச் சிறுபான்மை வருதல்.

அன்பரீர், 

இவ்வளவிலே நாம் உறுப்பியலை முடித்துக்கொண்டு, அடுத்துச் செய்யுளியலில் புகுவோமாக.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment