பாடம் - 2
அசை
----------
அசை என்பது முற்கூறிய குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துக்களால் ஆவது. அவ்வசை நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.
நேரசை
~~
தனிக்குறில் - க
தனிக்குறில் ஒற்று - கல்
தனிநெடில் - கா
தனிநெடில் ஒற்று - கால்
நிரையசை
~~~~
இருகுறில் - கட
இருகுறில் ஒற்று - கடல்
குறில்நெடில் - கடா
குறில்நெடில் ஒற்று - கடாம்
(மற்ற எழுத்துக்களுக்கும் இவ்வாறே கொள்க)

நெடிலும் குறிலும் சேர்ந்தும்,
நெடிலும் நெடிலும் சேர்ந்தும் ஓர் அசையாகாது.
குறிலும் நெடிலும் சேர்ந்து ஒலிக்கும்.

யாப்பிலக்கணத்திலே ஒற்றெழுத்துக்கு மதிப்பில்லை.
'கல்' என்பதில் உள்ள 'ல்' என்னும் ஒற்று மதிப்புப் பெறாததால் 'கல்' என்பதை ஓரெழுத்தாகவே கொள்ளவேண்டும்.
எனவே,
மேலே சொன்ன நேரசைக்குரிய 'க' முதலிய நான்கும் ஓரெழுத்துக்களாகவும்,
நிரையசைக்குரிய 'கட' முதலிய நான்கும் ஈரெழுத்துக்களாகவும் கொள்ளப்படும்.

பா 'ர்த்' தல் , கா 'ய்த்' து என ஈரொற்று சேர்ந்து வரினும் அவற்றுக்கும் மதிப்பில்லை.
கால் என்பது போல நெடிலொற்றாகவே கொள்ளவேண்டும்.

ஓரெழுத்தால் ஆகிய அசை - நேரசை
ஈரெழுத்தால் ஆகிய அசை - நிரையசை
நேர் என்றால் தனி.
நேரசை - தனியசை
நிரை என்றால் இணை.
நிரையசை - இணையசை
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment