Sunday, November 6, 2022

​பாடம் - 4: சீர்

 பாடம் - 4 


சீர்
----

அசைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது சீர் எனப்படும். அச்சீர் ஈரசைச்சீர், மூவசைச்சீர், என இருவகைப்படும்.

ஈரசைச்சீர் - 4
~~

நேர், நிரை என்னும்  அசை இரண்டினையும் பெருக்கினால் (2×2=4) ஈரசைச்சீர் நான்காகும்.

நேர் நேர்      - தேமா
நிரை நேர்    - புளிமா
நிரை நிரை - கருவிளம்   
நேர் நிரை    - கூவிளம் 

இவ்வீரசைச் சீர்கள் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியவை. இவை இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், அகவற்சீர் எனவும் பெயர் பெறும்.

தேமா, புளிமா எனும் இவ்விரண்டும் 'மாச்சீர்' எனவும், 
கருவிளம், கூவிளம் எனும் இவ்விரண்டும் 'விளச்சீர்' எனவும் வழங்கப்பெறும்.

மாச்சீர்  - நேரீற்று ஈரசைச்சீர்
விளச்சீர் - நிரையீற்று ஈரசைச்சீர்

👇

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் எனும்  இவை வாய்பாடுகளாகும். வாய்பாடுகளை அசை பிரித்தால் சீர்கள் வந்துவிடும்.

தே/மா
நேர்/நேர்

புளி/மா
நிரை/நேர்

கரு/விளம்
நிரை/நிரை

கூ/விளம்
நேர்/நிரை.

இஃது இனிவரும் வாய்பாடுகளுக்கும் பொருந்தும். இவ்வாய்பாடுகள் 'தளை' இலக்கணத்திற்கு முதன்மையானவை. இவற்றை நன்கு மனத்துள் நிறுத்துக.

மூவசைச்சீர் - 8
~~~

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் எனும் ஈரசைச் சீர்கள் நான்கனோடும் நேரசை  நிரையசை இரண்டினையும் தனித்தனியே சேர்த்தால் மூவசைச்சீர் (4×2=8) எட்டாகும்.

நேர் நேர் நேர்      - தேமாங்காய்
நிரை நேர் நேர்   - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர்   -  கூவிளங்காய்

இவை நான்கும் நேரீற்று மூவசைச்சீர். இவை காய்ச்சீர் எனவும், வெண்சீர் எனவும் வழங்கப்பெறும். இவை வெண்பாவுக்கு உரியவை.

நேர் நேர் நிரை     - தேமாங்கனி
நிரை நேர் நிரை    - புளிமாங்கனி
நிரை நிரை நிரை -  கருவிளங்கனி
நேர் நிரை நிரை    -  கூவிளங்கனி

இவை நான்கும் நிரையீற்று மூவசைச்சீர். இவை கனிச்சீர் எனவும், வஞ்சிச்சீர் எனவும் வழங்கப்பெறும். இவை வஞ்சிப்பாவுக்கு உரியவை.

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment