பாடம் - 9
அடி
------
சீர்கள் இரண்டு முதலாக இணைந்து (தொடர்ந்து) நடப்பது அடி எனப்படும்.
அடி ஐந்து வகைப்படும்.
ஓர் அடியில்,
இருசீர் இருப்பின் - குறளடி
முச்சீர் இருப்பின் - சிந்தடி
நாற்சீர் இருப்பின் - அளவடி
ஐஞ்சீர் இருப்பின் - நெடிலடி
அறுசீரும் அதற்கு மேலும் இருப்பின் - கழிநெடிலடி
கழிநெடிலடி அவ்வடியிலுள்ள சீர்களின் தொகைப் பெயரோடு சேர்ந்து, அறுசீர்க் கழிநெடிலடி, எழுசீர்க் கழிநெடிலடி என வழங்கும்.
காட்டு 

நிலாநிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
இது குறளடியால் வந்தது.
○
கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
இது சிந்தடியால் வந்தது.
○
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
இது அளவடியால் வந்தது
○
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
இது நெடிலடியால் வந்தது
○
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ
இது அறுசீர்க் கழிநெடிலடியால் வந்தது
○
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
இது எழுசீர்க் கழிநெடிலடியால் வந்தது
○
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்
இது எண்சீர்க் கழிநெடிலடியால் வந்தது
(செய்யுட்களைப் படிக்கும்போது இவ்வடிகளைப் பார்த்துப் பழகுக)
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment