பாடம் - 6
தளை
---------
சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர்.
தளை என்பதற்குக் 'கட்டு' என்று பொருள்.
தளைதல் - கட்டுதல். இரண்டு சீர்களை ஒன்றாகத் தளைதல்.
1.நேர் ஒன்றிய ஆசிரியத்தளை
2. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை
3. இயற்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை
5. கலித்தளை
6. ஒன்றிய வஞ்சித்தளை
7. ஒன்றாத வஞ்சித்தளை
எனத் தளை ஏழு வகைப்படும்.
தளைகொள்ளும்போது, 'நின்றசீர்' இன்னசீர் என்றும், அதாவது மாச்சீரா, விளச்சீரா, காய்ச்சீரா, கனிச்சீரா என்றும்;
'வருஞ்சீரின்' முதலசை நேரசையா, நிரையசையா என்றும் பார்க்கவேண்டும். வருஞ்சீர் இன்ன சீர் என்று பார்க்கவேண்டியதில்லை.
நின்றசீர் - முதலில் உள்ள சீர்
வருஞ்சீர் - அந்த நின்ற சீரோடு வந்து சேரும் சீர்.
காட்டு 

கற்க ^ கசடற
கற்க - நின்றசீர்
கசடற - வருஞ்சீர்
நின்றசீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் 'ஒன்றுதலும் ஒன்றாமையும்' தளை எனப்படும்.
ஒன்றுதல் - நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருதல்
ஒன்றாமை - நேருக்கு நிரையும், நிரைக்கு நேரும் வருதல்
ஒன்றுதல் - பொருந்துதல்
ஒன்றாமை - பொருந்தாமை
ஈறு - இறுதி, கடைசி
ஈற்றசை - சீரின் கடைசியில் நிற்கும் அசை
முதலசை - சீரின் முதலில் நிற்கும் அசை
மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்னும் நின்ற சீர்களின் ஈற்றசையாகிய 'நேர், நிரையோடு, வருஞ்சீரின் முதலசையாகிய 'நேரும் நிரையும்' ஒன்றுதலும் ஒன்றாமையும் 'தளை' எனப்படும் என்பது கருத்து.
1.மாமுன் நேர்வரின் - நேர் ஒன்றிய ஆசிரியத்தளை
2. விளம் முன் நிரைவரின் - நிரை ஒன்றிய ஆசிரியத்தளை
3. மாமுன் நிரை வரினும், விளம் முன் நேர் வரினும் - இயற்சீர் வெண்டளை
4. காய்முன் நேர் வரின் - வெண்சீர் வெண்டளை
5. காய்முன் நிரை வரின் - கலித்தளை
6. கனிமுன் நிரை வரின் - ஒன்றிய வஞ்சித்தளை
7. கனிமுன் நேர் வரின் - ஒன்றாத வஞ்சித்தளை
இவற்றை நினைவில் நிறுத்துக.
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment