Saturday, November 19, 2022

பாடம் - 11: தொடைத் தொடர்ச்சி

 பாடம் - 11


தொடைத் தொடர்ச்சி
-----------------------------------

தொடைச்சிறப்பு

மோனை
~~~

முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு, முதலெழுத்து 'வந்த எழுத்தே  வருதலன்றி, இனவெழுத்தும் வரும். அது 'இனமோனை' எனப்படும்.

இனவெழுத்துக்கள்
*

உயிர்

அ, ஆ, ஐ, ஔ    - ஓரினம்
இ, ஈ, எ, ஏ         -  ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ    - ஓரினம்

மெய்

ஞ் , ந்   - ஓரினம்
ம்,  வ்  - ஓரினம்
த், ச்    - ஓரினம்

மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வாராதாகையால், ஞ் ந் ம் வ் த் ச் என்னும் மெய்களை ஞ ஞா ஞி ஞீ முதலிய உயிர்மெய்யாகக் கொள்க. 

ஞ ந ம வ த ச என்னும் ஆறும் அல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவே மோனையாக வரும்.

மெய்யெழுத்துக்கள் இவ்வாறு இனமாக வருவதோடு, அம்மெய்களின் மேல் ஏறிய உயிர்களும் 'அ ஆ ஐ ஔ' என இனமாகவே வரவேண்டும். 'அ ஏ இ உ' என மாறி வருதல் கூடாது.

'யா'  இ ஈ எ ஏ - ஓரினமாகும். 

புதியன புகுதலாக  'யா, அ ஆ ஐ ஔ' ஓரினமாதலும் கொள்க.

கீழ்வரும் எடுத்துக்காட்டுக்களை நன்கு கவனித்துப் பார்த்து, மோனை இனமோனைகளைக் கண்டுகொள்க.

காட்டு 👇

அன்புக்கு முண்டோ அடைக்குந்தாழ் - அ, அ

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் - ஐ, ஆ, அ

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் - இ, எ, இ

உரென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் - உ, ஓ

(உயிர் தனித்து மோனையாக வந்தது தனிமோனை (அ, அ).
மற்றவை இனமோனை.)

👇

ஞாலத் துயிர்தளிர்ப்ப நல்குமே  - ஞா, ந

நீலச் சுனையில் ஞிமிறார்ப்ப - நீ, ஞி

மையுற்ற கண்ணருவி வார வளைசோர - மை, வா, வ

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன - வெ, மெ

துடியா நெடிதுயிராச் சோர்ந்து - து, சோ

சாரு மிடவற்றுத் தானில்லை - சா, தா

(ஞந, மவ, தச என்பன உயிரோடு கூடி இனமோனையாக வந்தன.)

👇

ஞாயிறு போய்ப்பட்ட ஞாட்பினுள் - ஞா, ஞா

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - நி, நி

மங்கல மென்ப மனைமாட்சி - ம,ம

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வை,வா,வா

துன்னியார் குற்றமும் தூற்று மரபினார் - து, தூ

சிறப்பீனும் செல்வமும் ஈனும் - சி, செ

(ஞந, மவ, தச என்பன அதற்கதுவே மோனையாக வந்தன)

👇

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் - ப,ப

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு - கு, கு, கு

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் - கொ, கு

(பிற மொழிகள் அதற்கதுவே மோனையாக வந்தன)

👇

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் - யா, இ, எ

யா , இ, எ - மோனை

யானையொடு வீழ்ந்தான் அவன் - யா, அ

யா, அ - மோனை.


எதுகை
~~

எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய் எழுத்தாயின் வெவ்வேறு உயிரும் வரலாம். இனவெழுத்து வரவேண்டும் என்பதில்லை. ஆனால், நெடிலுக்கு நெடிலும், குறிலுக்குக் குறிலும் வரவேண்டும்.

காட்டு 👇

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல

குஞ் - மஞ் என வந்த மெய்யே வந்தது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறி - நெறி என வந்த உயிரே வந்தது

ஆயிடை யின்னணம் வருந்தி யன்புகூர்
வேயுறழ் தோளியைப் பிரிந்து வெஞ்சின
மாயவெங் கொடுங்கலி வயத்த னாகினான்

ஆயி - வேயு - மாய.
யி - யு - ய  எதுகை

இவற்றை மனத்துள் நிறுத்துக.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment