பாடம் - 11
தொடைத் தொடர்ச்சி
------------------------------ -----
தொடைச்சிறப்பு
மோனை
~~~
முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு, முதலெழுத்து 'வந்த எழுத்தே வருதலன்றி, இனவெழுத்தும் வரும். அது 'இனமோனை' எனப்படும்.
இனவெழுத்துக்கள்
*
உயிர்
அ, ஆ, ஐ, ஔ - ஓரினம்
இ, ஈ, எ, ஏ - ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்
மெய்
ஞ் , ந் - ஓரினம்
ம், வ் - ஓரினம்
த், ச் - ஓரினம்
மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வாராதாகையால், ஞ் ந் ம் வ் த் ச் என்னும் மெய்களை ஞ ஞா ஞி ஞீ முதலிய உயிர்மெய்யாகக் கொள்க.
ஞ ந ம வ த ச என்னும் ஆறும் அல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவே மோனையாக வரும்.
மெய்யெழுத்துக்கள் இவ்வாறு இனமாக வருவதோடு, அம்மெய்களின் மேல் ஏறிய உயிர்களும் 'அ ஆ ஐ ஔ' என இனமாகவே வரவேண்டும். 'அ ஏ இ உ' என மாறி வருதல் கூடாது.
'யா' இ ஈ எ ஏ - ஓரினமாகும்.
புதியன புகுதலாக 'யா, அ ஆ ஐ ஔ' ஓரினமாதலும் கொள்க.
கீழ்வரும் எடுத்துக்காட்டுக்களை நன்கு கவனித்துப் பார்த்து, மோனை இனமோனைகளைக் கண்டுகொள்க.
காட்டு 

அன்புக்கு முண்டோ அடைக்குந்தாழ் - அ, அ
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் - ஐ, ஆ, அ
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் - இ, எ, இ
உரென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் - உ, ஓ
(உயிர் தனித்து மோனையாக வந்தது தனிமோனை (அ, அ).
மற்றவை இனமோனை.)

ஞாலத் துயிர்தளிர்ப்ப நல்குமே - ஞா, ந
நீலச் சுனையில் ஞிமிறார்ப்ப - நீ, ஞி
மையுற்ற கண்ணருவி வார வளைசோர - மை, வா, வ
வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன - வெ, மெ
துடியா நெடிதுயிராச் சோர்ந்து - து, சோ
சாரு மிடவற்றுத் தானில்லை - சா, தா
(ஞந, மவ, தச என்பன உயிரோடு கூடி இனமோனையாக வந்தன.)

ஞாயிறு போய்ப்பட்ட ஞாட்பினுள் - ஞா, ஞா
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - நி, நி
மங்கல மென்ப மனைமாட்சி - ம,ம
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வை,வா,வா
துன்னியார் குற்றமும் தூற்று மரபினார் - து, தூ
சிறப்பீனும் செல்வமும் ஈனும் - சி, செ
(ஞந, மவ, தச என்பன அதற்கதுவே மோனையாக வந்தன)

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் - ப,ப
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு - கு, கு, கு
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் - கொ, கு
(பிற மொழிகள் அதற்கதுவே மோனையாக வந்தன)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் - யா, இ, எ
யா , இ, எ - மோனை
யானையொடு வீழ்ந்தான் அவன் - யா, அ
யா, அ - மோனை.
எதுகை
~~
எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய் எழுத்தாயின் வெவ்வேறு உயிரும் வரலாம். இனவெழுத்து வரவேண்டும் என்பதில்லை. ஆனால், நெடிலுக்கு நெடிலும், குறிலுக்குக் குறிலும் வரவேண்டும்.
காட்டு 

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல
குஞ் - மஞ் என வந்த மெய்யே வந்தது.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொறி - நெறி என வந்த உயிரே வந்தது
ஆயிடை யின்னணம் வருந்தி யன்புகூர்
வேயுறழ் தோளியைப் பிரிந்து வெஞ்சின
மாயவெங் கொடுங்கலி வயத்த னாகினான்
ஆயி - வேயு - மாய.
யி - யு - ய எதுகை
இவற்றை மனத்துள் நிறுத்துக.
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment