Saturday, November 26, 2022

பாடம் - 13: செய்யுளியல்

 பாடம் - 13


செய்யுளியல்

----------------------


செய்யுள் இயல் என்பது செய்யுளின் இலக்கணம் கூறுவது என்று பொருள். உறுப்பியலில் கூறிய எழுத்து, அசை  முதலிய அறுவகை உறுப்புக்களினால், சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்தச், சொல்லணியும் பொருளணியும் அமையத், தொடையின்பமும் நடையின்பமும் நிறைந்த ஓசை நலத்துடன் செய்வது செய்யுள் ஆகும்.

யாப்பிலக்கணத்தில் செய்யுளைப் 'பா' என்று வழங்குதல் மரபு.  பாவும் பாவினமும் எனச் செய்யுள் இருவகைப்படும். 

பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் 'பா' நான்கு வகைப்படும். ஆசிரியப்பா 'அகவற்பா' எனவும் பெயர்பெறும்.  கடைச்சங்க காலத்தும், அதற்கு முற்காலத்தும் இந்த நால்வகைப் பாக்களே பாடலில் பயின்று வந்தன.

பாவினம் - தாழிசை, துறை, விருத்தம் எனப் பாவினம் மூன்று வகைப்படும். 

பா இனம் - பாவினது இனம். 

இவை மூன்றையும் பா நான்குடன் உறழப் பாவினம் (4×3=12) பன்னிரண்டாகும்.

அவையாவன:

1. வெண்டாழிசை

2. வெண்டுறை

3. வெளிவிருத்தம்

4. ஆசிரியத்தாழிசை

5. ஆசிரியத்துறை

6. ஆசிரிய விருத்தம்

7. கலித்தாழிசை

8. கலித்துறை

9. கலிவிருத்தம்

10. வஞ்சித்தாழிசை

11. வஞ்சித்துறை

12. வஞ்சி விருத்தம்


குறிப்பு 👇

உறுப்பியலில் கூறிய அறுவகை உறுப்புக்களில் எழுத்து, அசை, தொடை என்னும் மூன்றும் எல்லாப் பாக்களுக்கும் பாவினங்களுக்கும் பொது.

சீர், தளை, அடி என்னும் மூன்று உறுப்பினைக் கொண்டே 'பா' வேறுபாடு அமைவதாகும். இதனை எப்போதும் மனத்துள் கொள்க.

ஓசை

~~~~

பழந்தமிழ்ப் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். 

செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசை நான்கு வகைப்படும்.

1. செப்பலோசை  - இருவர் உரையாடல் போன்ற ஓசை

2. அகவலோசை  - ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுதல் போன்ற ஓசை

3. துள்ளலோசை  - கன்று துள்ளினாற் போலச் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்துயர்ந்து வருவது.

4. தூங்கலோசை  - சீர்தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது. 

👇

வெண்பா - செப்பலோசை யுடையது

ஆசிரியப்பா - அகவலோசை யுடையது

கலிப்பா - துள்ளலோசை யுடையது

வஞ்சிப்பா - தூங்கலோசை யுடையது

👇

இருவகை வெண்டளையானும் வருவது செப்பலோசை

இருவகை ஆசிரியத்தளையானும் வருவது அகவலோசை

கலித்தளையான் வருவது துள்ளலோசை

இருவகை வஞ்சித்தளையானும் வருவது தூங்கலோசை

இதனை நினைவில் கொள்க.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment